தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த முறை அ.தி.மு.க. ஆட்சி அமையும்” என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தி.மு.க. 22 கட்சிகளுடன் பெரிய கூட்டணி அமைத்து, 40 முதல் 44 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணக்கு போட்டுள்ளது. பல கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. கூட்டணிக்கு 120 முதல் 160 தொகுதிகள் வரை வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றன. ஆனால், அ.தி.மு.க. தரப்பு இதை ஏற்கவில்லை.
அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி தன் நண்பர்களிடம் பகிர்ந்த தகவல்களின்படி, அ.தி.மு.க.வின் விசுவாச தொண்டர்கள், பா.ஜ.வின் இந்து வாக்குகள், பா.ம.க.வின் வன்னிய சமுதாய வாக்குகள் மற்றும் தே.மு.க. மூலம் தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்படும் கிறிஸ்தவ சமுதாய வாக்குகள் ஆகியவை ஒன்று சேர்ந்தால் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த இபிஎஸ்!! எடப்பாடி பழனிசாமியின் அனல் பறக்கும் பிரசார யுக்தி!

மேலும், 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், கொரோனா காலத்தில் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2021 தேர்தலில் உளவுத்துறை மற்றும் அதிகாரிகள் “அ.தி.மு.க. ஆட்சி தான் வரும்” என உறுதி கூறியும் முடிவு வேறு விதமாக இருந்தது. அதே தவறு இந்த முறையும் நடக்காது என பழனிசாமி நம்புகிறார்.
தற்போது அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை தி.மு.க. ஆட்சி தான் வரும் என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ள நிலையில், அதை ஸ்டாலின் நம்பினாலும் உண்மை அப்படி இருக்காது என பழனிசாமி தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தரப்பில் இந்த நம்பிக்கை அதிகரித்துள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியும் தனது வெற்றி மீது உறுதியாக உள்ளது. வரும் 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் இரு கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பொய் சொல்லி மக்களை குழப்ப நினைக்கிறார் ஸ்டாலின்! என்ன சொன்னாலும் திமுக தோற்க போறது உறுதி - அண்ணாமலை!