GENZ DMK அமைப்பின் மாநில அளவிலான செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனின் வீட்டிற்கு நள்ளிரவு நேரத்தில் போலீசார் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு இரவு நேரத்தில் போலீசார் சென்றுள்ளனர். அப்போது அன்பானந்தன் அரியப்பனின் குடும்பத்தினரும் உறவினர்களும், அவரை எந்த காரணத்திற்காக கைது செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், நள்ளிரவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர்கள் போலீசாரிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வீடியோவில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின்படி கருத்து தெரிவிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். GENZ DMK அணியில் செயல்பட்டு வரும் அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காக பெருமளவு போலீசார் வந்ததாகவும், அவர்களிடம் கைது வாரண்ட் காட்டப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: "ரீல்ஸ் கோஷ்டி... போய் வேலைய பாருங்க"... Ex. அமைச்சர் TRB ராஜா விளாசல்..!
மேலும், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ய முயன்றபோதும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கைது நடவடிக்கையை மேற்கொள்வதில் போலீசார் உறுதியாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது வாரண்ட் மற்றும் அதன் விவரங்களை காண்பிக்குமாறு கேட்டபோதும் அதற்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும், சட்ட உதவியை நாட முயன்ற நிலையிலும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அன்பானந்தன் அரியப்பன் கைது செய்யப்பட்டால் அவரை எங்கு அழைத்துச் செல்ல உள்ளனர் என்ற தகவல்கூட தெரிவிக்கப்படவில்லை எனவும், அவருக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அந்த வீடியோவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திமுக ஆதரவாளரான யு2 புருட்டோஸ் தனது சமூக வலைதள பதிவில், GENZ DMK அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காக நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டை போலீசார் முற்றுகையிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், டிஎஸ்பி உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், கைது வாரண்ட் அல்லது எஃப்ஐஆர் நகல் போன்ற ஆவணங்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், GENZ DMK அமைப்பின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றன என்றும், ஜனநாயக உரிமைகள் குறித்து பல்வேறு கேள்விகளையும் தனது பதிவில் முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், அன்பானந்தன் அரியப்பனை கைது செய்வதற்காகவே போலீசார் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருந்ததா என்பது குறித்து காவல்துறை தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
போலீசார் தரப்பிலிருந்து முழுமையான தகவல் வெளியான பின்னரே, இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் சட்ட ரீதியான அம்சங்கள் தெளிவாக தெரியவரும். அதேசமயம், திமுக ஆதரவாளர்கள் கூறுவதன்படி, அங்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: #அப்பாவகாணோம்..! CM விஜய் செய்த சம்பவம்... வைரலாகும் HASHTAG..!!