நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. கட்டணம் வசூலிக்கும் முறையில் மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாகத் தானியங்கி முறையில் (Free Flow Toll Collection) சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 48-இன் சூரத்-பருச் பகுதியில் அமைந்துள்ள சோராயாசி சுங்கச்சாவடியில் இந்த நவீன முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்படாமலேயே கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.

முன்பு ரொக்கப் பணம் மூலம் தொடங்கிய சுங்கக் கட்டண வசூல், பின்னர் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறியது. அதனைத் தொடர்ந்து காரின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ (FASTag) வில்லை மூலம் தானியங்கி வசூல் அமலுக்கு வந்தது. இப்போது அதன் அடுத்தகட்டமாக, கேமராக்கள் மற்றும் அதிநவீன சென்சார்கள் உதவியுடன் வாகனப் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் விவரங்களை உடனடியாக அடையாளம் கண்டு கட்டணத்தை வசூலிக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!
இந்தப் புதிய முறை நெடுஞ்சாலைப் பயணத்தை மேலும் வசதியாகவும், வேகமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசல் கணிசமாகக் குறையும். இதனால் பயண நேரம் குறையும், எரிபொருள் செலவு குறையும், வாகனப் புகை மாசு கணிசமாகக் குறைவு பெறும். மேலும், மனிதத் தலையீடு குறைவதால் ஊழல் மற்றும் தவறான வசூல் சாத்தியங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிதின் கட்காரி தனது எக்ஸ் (X) தளத்தில், “நெடுஞ்சாலை சுங்க முறையில் மிகப்பெரிய மாற்றம். இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், உள்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயர்த்துவதிலும் இது முக்கிய மைல்கல்” எனப் பதிவிட்டார்.

இந்த மாற்றம் நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான நிதியை ஈட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண முறை, தற்போது தொழில்நுட்ப ரீதியாக மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இந்தப் புதிய அமைப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் எனப் பயணிகள் வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: குஜராத்தை லேசாக உலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு..!! பதறிய மக்கள்..!!