ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய ஒரு மாதத்துக்குப் பிறகு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் தொடர்ந்து சிக்கலில் சிக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஈரான் சில நிபந்தனைகளை விதித்தது. அவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதால், கடந்த 7ஆம் தேதி இரு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஈரான் இப்போது பெரும் திணறலில் உள்ளது. போர் பதற்றத்தின் போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏராளமான கடல் கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் பரப்பியிருந்தது. இப்போது அந்த கண்ணிவெடிகளை எங்கு வைத்தோம், எப்படி அகற்றுவது என்பது குறித்து ஈரான் தரப்புக்கு சரியான தகவல்கள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!

ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தபடி, கண்ணிவெடிகள் சீரற்ற முறையில் பரப்பப்பட்டதால், அவற்றை மீண்டும் கண்டுபிடிப்பது மிகக் கடினமான வேலையாக மாறியுள்ளது. கடல் நீரோட்டத்தின் காரணமாக பல கண்ணிவெடிகள் அவற்றின் அசல் இடத்தை விட்டு வெகு தூரம் நகர்ந்து சென்றுவிட்டன.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட்டாலும், அதன் வழியாக செல்லும் கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. இந்த சிக்கல் காரணமாக ஜலசந்தியைத் திறப்பதில் ஈரான் தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “கடல் கண்ணிவெடிகளால் உங்கள் கப்பல்கள் சேதமடைய விரும்பவில்லை என்றால், ஹார்முஸ் ஜலசந்திக்கு பதிலாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்” என அது எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம், போர் முடிந்த பிறகும் ஈரான் எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. உலக நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்து விரைவில் தொடர வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், ஈரானின் இந்த தயக்கம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!