சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலை (Mint Street) பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 38-ஆவது ஆண்டு தொடக்க விழா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
பொதுக்கூட்டத்தில் முதலில் பேசிய சௌமியா அன்புமணி, பாமகவின் சாதனைகளையும் நீர் மேலாண்மைப் போராட்டங்களையும் பட்டியலிட்டார். பாமகவின் அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தை இத்தனை ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் அடுத்த 100 ஆண்டுகாலத் தேவையை உணர்ந்து தண்ணீருக்காகப் போராடும் ஒரே கட்சி பாமக தான். காவிரி உரிமைக்காகவும், மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்குத் தண்ணீர் வராது என்ற காரணத்திற்காகவும் தொடர்ந்து பாமக குரலெழுப்பி வருகிறது.
பாலாறு, தாமிரபரணியைக் காக்க நடைபயணம் மேற்கொண்ட ஒரே தலைவர் அன்புமணி ராமதாஸ் தான். இன்று அவசரக் காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தவர் அவர்தான். பொதுமக்கள் கேட்பதற்கு முன்பே அவர்களின் தேவைகளை நிறைவேற்றிய கட்சி பாமக. இன்று அனைவரும் போதைப்பொருளுக்கு எதிராகப் பேசுகிறார்கள், ஆனால் பல ஆண்டுகளாக இதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது பாமக தான்.
இதையும் படிங்க: "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!
தொடர்ந்து மேடையில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் 38 ஆண்டுகால வரலாற்றுச் சாதனைகளையும், தற்போதைய அரசியல் சூழலையும் விரிவாகப் பேசினார். 38 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சம் மக்களைத் திரட்டி, இந்தச் சமூகநீதிப் பேரியக்கத்தைத் தொடங்கினார். பாமக மீது 'சாதிக்கட்சி' என எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு சமூகநீதிக்காக, போதைப்பொருள் ஒழிப்புக்காக, பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். தமிழ்நாட்டின் வரலாற்றைப் பாமகவை விட்டுவிட்டு எழுதவே முடியாது. பாமகவிற்குப் பின்னால் தொடங்கப்பட்ட எத்தனையோ கட்சிகள் காணாமல் போய்விட்டன, ஆனால் நாம் பல நெருக்கடிகளையும் தாண்டி கம்பீரமாக நிற்கிறோம்.
தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டிய தேதி நவம்பர் 1 என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், முந்தைய திமுக அரசைப் போலவே தற்போதைய தவெக அரசும் ஜூலை 18-ஐப் பின்பற்றுகிறது. இது குறித்து ஒரு பெரிய அரசியல் தலைவர் என்னிடம் பேசும்போது, '60 ஆண்டுகாலம் இரு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆண்டிருந்தாலும், தமிழ்நாட்டிற்குப் பாசிச பிடியிலிருந்து உண்மையான விடுதலை கிடைத்தது மே 4-ஆம் தேதி தான்' என்று குறிப்பிட்டார்.

கடந்த திமுக அரசு ஊடகங்களை மிரட்டியதாக அன்புமணி ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த ஆட்சியில் திமுக அரசின் பொய் முதலீடுகள் குறித்து நாங்கள் ஆதாரங்களுடன் புத்தகம் வெளியிட்டோம். ஆனால், அந்தச் செய்தியை வெளியிடக் கூடாது என திமுகவின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், முன்னணி ஊடக நிறுவனத்தின் முதலாளியை மிரட்டி அதைத் தடுத்தார். கடந்த ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும், ஜனநாயகமும் இல்லை. ஆனால், தற்போதைய ஆட்சியில் ஊடகங்களுக்கு அந்த அச்சுறுத்தல் இல்லை; சுதந்திரம் கிடைத்துள்ளது.
இப்படி நான் பேசினால் அன்புமணி ஆளும் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாங்கள் ஆலோசனைகளை வழங்குவோம். கடந்த திமுக அரசு எங்கள் ஆலோசனைகளைக் கேட்கவில்லை, ஆனால் தற்போதைய தவெக அரசு எங்கள் ஆலோசனைகளை மதிக்கிறது, கேட்கிறது.
சமூகநீதி கணக்கெடுப்பு (சாதிவாரி கணக்கெடுப்பு) நடத்த வேண்டும் எனப் பாமக கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆளும் தவெக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இது தொடர்பாக முதலமைச்சரைச் சந்தித்து ஏன் இந்த கணக்கெடுப்பு அவசியம் என விளக்கம் அளித்தோம். அதன் விளைவாகவே ஆளுநர் உரையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முந்தைய திராவிட முதலமைச்சர்களுக்கு அதிகாரம் இருந்தும், பலமுறை கோரிக்கை வைத்தும் இதைச் செய்ய மனமில்லை. ஆனால், தற்போதைய தைரியமாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
அதேபோல், தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை குறித்து நீர்வளத்துறை அமைச்சரை நான் சந்தித்தவுடன், பாமக தவெக-வுடன் கூட்டணி வைக்கப் போவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள். பாமக எப்போதுமே ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் கட்சி. திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் நீர் மேலாண்மையைக் கோட்டை விட்டுவிட்டன. பிற மாநிலங்கள் நீர் மேலாண்மையில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்யும்போது, தமிழகத்தில் இலவசங்களுக்கும், மாதம் ஆயிரம் ரூபாய்க்கும் முதலீடு செய்கிறார்கள். இதனால் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் பிச்சை எடுக்கும் நிலை உள்ளது. சென்னையின் நீர்நிலை மற்றும் குப்பை மேலாண்மைப் பாதிப்புகளுக்கு முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தான் காரணம். சென்னையின் மேயர் பிரியாவைச் செயல்பட விடாமல் காரில் தொங்கிக் கொண்டு போகும் அளவிற்கு அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருந்தார் சேகர்பாபு. அதை அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும் கண்டுகொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஜனநாயக ரீதியாகக் கொண்டு வந்துள்ள இந்த ஆட்சி மாற்றத்தை நான் வரவேற்கிறேன். சிலர் இந்த மாற்றத்தை அருவருப்பாக விமர்சிக்கிறார்கள். இளைஞர்கள் இப்படி இருப்பதற்குக் காரணமே முந்தைய திராவிடக் கட்சிகள் தான். தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் அரசியலுக்குப் புதியவர்தான், அவருக்கும் சில விஷயங்கள் தெரியவில்லைதான். ஆனால், அவரிடம் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், துணிச்சலும் இருக்கிறது. தமிழக மக்கள் எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும், ஒருநாள் பாமக ஆட்சிக்கு வரும் என்று அன்புமணி ராமதாஸ் தனது உரையை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: "3 மாதங்களில் கூட ஜோசப் விஜய் வீட்டுக்குப்போகலாம்!" – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு!