தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோருடன் இணைந்து அவர் நடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒளி விளக்கு திரைப்படத்தின் நடிப்பு எக்காலத்திற்கும் நினைவுகூரத்தக்கது என எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!
பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 திரைப்படங்களில் நடித்துத் தனது ஈடு இணையற்ற நடிப்பாற்றலால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த அவரது கலைச்சேவை திரையுலக வரலாற்றில் என்றும் போற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற கலைஞரான சௌகார் ஜானகியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரைச் சார்ந்த திரையுலக நண்பர்களுக்கும் அதிமுக சார்பிலும் தமது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??