சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துறையைப் பற்றிப் பேசாமல், அஇஅதிமுக-வை வம்புக்கு இழுத்துப் பேசியுள்ள நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு அஇஅதிமுக தலைமை மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, வாய்க்கு வந்ததையெல்லாம் அவையில் பேசி வருவதாக அஇஅதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமாகச் சாடியுள்ளது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி குறித்தோ அல்லது தனது தலைவர் குறித்தோ பேசியது பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை என்றும், 'பிளாக் டிக்கெட் விற்றதெல்லாம் ஒரு வரலாறா?' என்றெல்லாம் கேள்வி கேட்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள அஇஅதிமுக, தேவையே இல்லாமல் அஇஅதிமுக-வைச் சீண்டும் வகையில் பேசியதற்கான அரசியல் எதிர்வினையை அவர் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. சர்கார் திரைப்பட பேனர்களைக் கழகத் தொண்டர்கள் கிழித்ததால்தான் 2021-ல் அஇஅதிமுக ஆட்சி அமையவில்லை என்று அமைச்சர் பேசியிருப்பது, அரசியல் புரிதலற்ற நிலையை வெளிப்படுத்துவதாக விமர்சித்துள்ளது.

உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வீற்றிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இயற்பெயரைப் பயன்படுத்தித் தவறாகச் சித்தரித்த படத்தை எதிர்த்து அம்மாவின் தொண்டர்கள் வீறுகொண்டு எழுந்ததில் எந்தத் தவறும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. அதே சர்கார் படத்தில் தூக்கி எறிவது போலக் காட்சி அமைக்கப்பட்ட 'அம்மா மடிக்கணினி' உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை, இன்று தவெக அரசு தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் புகாரளித்த மாணவர் படுகொலையா? கோவை சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!
மேலும், 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு இயல்பாக ஏற்பட்ட மாற்றத்தினால் 33.3% வாக்குகள் மற்றும் 75 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றிய இயக்கத்தை நோக்கி, 'பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது' என்றெல்லாம் கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதைத் தியேட்டர் வாசலோடும் சமூக வலைதளங்களோடும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அஇஅதிமுக தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!