தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அவருக்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணத்துடன் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழா சில நாட்கள் தாமதமான நிலையில் இறுதியாக நடைபெற்றது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்திருந்தன. இருப்பினும், பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பின்னர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிகழ்வுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பதவியேற்பு விழாவில் ஏற்பட்ட தாமதத்தைப் பார்க்கும்போது, நிலைமை இந்த அளவுக்கு சென்றிருக்கக் கூடாது. மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கவர்னர் மாளிகைக்கு (மக்கள் பவன்) பல முறை செல்ல நேரிட்டது. ஆனால் இறுதியில் பெரும்பான்மை எண்ணிக்கை நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

மேலும் பேசிய உமர் அப்துல்லா, “பெரும்பான்மை என்பது சட்டசபையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும், கவர்னர் மாளிகையில் அல்ல. எப்படியிருந்தாலும், காலதாமதமாக நடந்தாலும் இது நல்ல விஷயம்தான். விஜய் தனது பெரும்பான்மையை சட்டசபையில் வெற்றிகரமாக நிரூபிப்பார் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெக தலைமையில் ஆட்சி அமைக்கும் சூழல் உருவானது. விஜய்யின் தலைமையில் உருவான கூட்டணி போதிய ஆதரவைப் பெற்றதாக கூறப்படுகிறது. பதவியேற்புக்கு முன்பு ஏற்பட்ட சில சட்டபூர்வ நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளால் தாமதம் ஏற்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். புதிய முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பதவியேற்ற உடனேயே புதிய அமைச்சரவை முக்கிய முடிவுகளை எடுக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட அரசியல் சூழல் எப்படி அமையும் என்பதை நோக்கி அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர். விஜய்யின் இந்த பதவியேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.
இதையும் படிங்க: "பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்"..! தவெக பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு..! பரபரக்கும் சட்டசபை..!