நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான நிலையில், அதனைத் தனது உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சேனல் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை கோவை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கூடப் பெறாத நிலையில் படம் கசிந்தது திரையுலகில் ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ராசி பிரைம் மூவி (Rasi Prime Movie) என்ற தனியார் உள்ளூர் சேனல் செயல்பட்டு வருகிறது. இந்தப் சேனலில், தணிக்கை செய்யப்படாத மற்றும் இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்த விஜய்யின் 'ஜனநாயன்' திரைப்படம் நேற்று ஒளிபரப்பப்பட்டது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ஒரு முழுத் திரைப்படத்தை உள்ளூர் சேனலில் திரையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புறநகர் கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளர் மோகனப்பிரியா, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தலைவரின் திரைப்படத்தைப் பாதுகாக்கவும், அதன் வணிக மதிப்பைக் குலைக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44) மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்தனர். சேனல் அலுவலகத்தில் இருந்த கணினி, ஐந்து ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட பிற மின்னணுச் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் உத்தரவின்படி, அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'ஜனநாயன்' படம் இணையத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்துச் சைபர் கிரைம் போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் வேளையில், கோவையில் நடந்த இந்த அதிரடி கைது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!