காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன், கிரிக்கெட் பந்து தலையில் பலமாக தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள NGO நகர் பகுதியைச் சேர்ந்த சுகிர்தா லட்சுமியின் 11 வயது மகன் சாய் மோத்தீஸ்வரன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 26ஆம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் சாய் மோத்தீஸ்வரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!
அப்போது, மைதானத்தில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், தீடிரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், காஞ்சி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே கடைசியில் சிறுவனின் உயிரை குடித்த பரிதாபம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!