டெல்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் மின்னஞ்சல்களை 1,100 முறை அனுப்பிய கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் லூயிஸ் (47) என்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு காலை நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வரத் தொடங்கின. இந்த மின்னஞ்சல்கள் வெளிநாட்டு முகவரிகளில் இருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதால், போலீசார் திணறினர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் அந்த மின்னஞ்சல்கள் வெறும் புரளி என்பது தெரியவந்தது. ஆனால் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன என்பதை கண்டறிய டெல்லி போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மணிப்பூர்: அதிரடி சோதனையில் இறங்கிய இந்திய ராணுவம்..!! 17 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!!
இறுதியில், அந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அனுப்பப்பட்டதை டெல்லி போலீசார் கண்டறிந்தனர். மைசூர் போலீசாரின் உதவியுடன் தீவிரமாக தேடியதில், ஸ்ரீனிவாஸ் லூயிஸ் என்ற நபர் தான் இந்த 1,100 மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியது தெரியவந்தது.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீனிவாஸ் லூயிஸ் முதுகலை பட்டதாரி. அவரது தாயார் கர்நாடக அரசின் முன்னாள் ஊழியர். திருமணம் ஆகாத இவர், தனது தாயுடன் மைசூரில் வசித்து வந்தார். போலீசார் அவரை உள்ளூர் போலீசாரின் உதவியுடன் கைது செய்து, மேல் விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணையில், அவர் தொடர்ந்து இத்தகைய மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வந்தது உறுதியானது. பள்ளிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் திறக்கும் நேரத்தில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதால், பல இடங்களில் பெரும் பீதியும், இயக்கத் தடையும் ஏற்பட்டது. மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது உறுதியான பின்னரும், ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு சோதனை நடத்த வேண்டிய நிலை உருவானது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலீசார் இந்த வழக்கில் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய பொய் மிரட்டல்கள் எதிர்காலத்தில் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த கைது சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: காதலியை கொன்று துண்டு துண்டாக்கி பிரிட்ஜில் அடைத்த கொடூரம்!! கடற்படை அதிகாரி குரூரம்!