காவிரி நதிநீர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட முடியாது என்றும், கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை உற்சாகமாக வரவேற்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள வா வா ராகுலே தமிழகம் வரவேற்குதே என்ற சிறப்பு வரவேற்புப் பாடலைச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் இன்று முறைப்படி வெளியிட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பல்வேறு சுடச்சுட அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், காவிரி நதிநீர் விவகாரத்தை யாரும் அரசியல் ரீதியாகப் பார்க்கக் கூடாது. இதனை தமிழக விவசாயிகளின் வாழ்வாதார உரிமையாகவும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமையாகவும் பார்க்க வேண்டும். விவசாயம் செழிக்கத் தண்ணீர் அத்தியாவசியத் தேவை என்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழக மக்களின் உரிமைகளுக்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் என்றும் துணைநிற்கும்; இதில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "காவிரி விவகாரம் பேச பெங்களூரு வாருங்கள்!" - முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவக்குமார் அழைப்பு!

மேலும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கித் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய வரலாறுகள் உண்டு. மேகதாது அணை விவகாரத்திலும் காவிரி நீரிலும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்ப வேண்டும். அன்புமணி ராமதாஸ் போன்றவர்கள் அங்கொரு நிலைப்பாடு, இங்கொரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து பேசி வருகிறார்கள் எனச் சாடினார்.
தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அம்மாநில அரசியல் சூழ்நிலையைக் காரணம் காட்டித் தண்ணீர் திறக்க முடியாது எனக் கூறுவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டின் உரிமை என்றைக்கும் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகமான முடிவு எட்டப்பட்டால் அது நல்லதுதான்" என்றார்.
இறுதியாக, காவிரி பிரச்சனையில் ராகுல் காந்தி தலையிட்டுத் தீர்த்து வைக்க வேண்டியதுதானே என்ற நிருபர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி நேரடியாகத் தலையிட முடியாது. கடந்த 12 வருடங்களாக மத்தியில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுதான் உரிய பதிலை அளிக்க வேண்டும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்..! தமிழகத்தின் முக்கிய கோரிக்கை..! செவி சாய்க்குமா கர்நாடகா...?