கேரளாவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளம் பெண் ஒருவர், கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்து, அதை ஜன்னல் வழியாக வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வயிற்று வலி காரணமாக அந்த இளம் பெண், ஹரிப்பாடு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ள முயன்றபோது, அவர் அதற்கு ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனால், அந்த பெண் கர்ப்பமாக இருக்கலாம் என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், நேற்று அதிகாலை அந்த பெண் மருத்துவமனையின் கழிப்பறைக்கு சென்றுள்ளார். சில நிமிடங்களில் கழிப்பறை பகுதியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: கேரளாவில் உயருகிறது பால் விலை..!! ஜூன் 1 முதல் அமல்..!! ஒரு லிட்டருக்கு இவ்ளோவா..!!

அதே நேரத்தில் கழிப்பறையின் பின்புற பகுதியில் தெருநாய்கள் அதிகமாக குரைத்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, புதிதாக பிறந்த பெண் குழந்தை வெளியே வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக குழந்தையை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். தெருநாய்கள் அதிகம் சுற்றித்திரியும் பகுதியில் குழந்தை வீசப்பட்டிருந்ததால், சில நிமிடங்கள் தாமதமானாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருமணம் ஆகாத நிலையில் குழந்தை பிறந்ததால் பயந்துபோய், அந்த பெண் கழிப்பறை ஜன்னல் வழியாக குழந்தையை வெளியே வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பின்னர் தாயும் குழந்தையும் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!