
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்கிய முதல் நாளே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்த விவகாரம் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் BLO (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) மரணங்கள் குறித்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன், மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவைத் தலைவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து, மக்களவை முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி! அமெரிக்க H-1B விசா பெறுவதில் 70% சரிவு!
ஆனால், பிற்பகலிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளே பிரதான விவாதமின்றி ஒத்திவைக்கப்பட்டது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!