உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்களைப் புறக்கணித்து அச்சிட்ட அதிகாரி யார் என்பது குறித்த முழுமையான விவரங்களை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் திருக்கோவில் இணை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மீனாட்சியம்மன் கோவில் மகா குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வரும் 17-ஆம் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில், இவ்விழாவிற்காகத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் சட்டப்பூர்வமாகப் பதவி வகிக்கும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

திருக்கோயிலின் நிர்வாக விவகாரங்கள் மற்றும் நடைபெறவுள்ள திருக்குடமுழுக்குத் திருப்பணிகளில் அறங்காவலர்கள் தங்களது சட்டப்பூர்வ கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் வகையிலும், எங்களை ஓரங்கட்டும் வகையிலும் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, அறங்காவலர்களின் சட்டப்பூர்வ செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கக் கூடாது எனவும், எங்கள் பணிகளில் தலையிடவோ அல்லது விலக்கி வைக்கவோ கூடாது எனவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: S.I.R..! டெல்லியில் 4.57 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!
இந்த மனு நீதிபதி சரவணன் அமர்வில் அவசர விசாரணையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலர் குழுவின் பெயர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி வாதாடினார்.
இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி, அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்றி அழைப்பிதழை அச்சிட்ட அதிகாரி யார்? தன்னிச்சையாக அந்த அழைப்பிதழை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கிய உயர் அதிகாரி யார்? என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். மேலும், இதுதொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் முழு விவரங்களையும் நாளை நீதிமன்றத்தில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையருக்குக் கெடு விதித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார். இச்சம்பவம் ஆன்மிக மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..! தமிழ்நாடு அரசு நடவடிக்கை..!!