தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தொடர்பான குடும்பத் தகராறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று கடும் சம்பவம் நிகழ்ந்தது. 2022 ஆகஸ்ட் 8 அன்று புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு இது. சொத்துப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சம்பவத்தில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.நீண்ட காலமாக குற்றப்பத்திரிகையைப் பெற நேரில் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அமைச்சர் மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குடும்பப் பிரச்சினை என்பதால் சமரச தீர்வு மையத்திற்கு வழக்கு அனுப்பப்பட்டது.

பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் புகார்தாரர் தரப்பில் விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதால் சமரசம் தோல்வியடைந்தது. இதையடுத்து மனுவின் மீதான விசாரணை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று வந்தது.அப்போது அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார். மேலும் அவரது தந்தை ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். “மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து அரசர் அல்ல. நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் என்று அவரால் கூற முடியாது. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோதுகூட நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார்.
இதையும் படிங்க: மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா?... நிதி அமைச்சர் மனுவால் டென்ஷன் ஆன நீதிபதி... காரணம் என்ன?
அமைச்சராகும் முன்பு ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு ஏன் ஆஜராக மாட்டார்? வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது நீதிமன்றத்தில் ஆஜராகலாமே? இங்கிருந்து புதுச்சேரிக்கு இரண்டரை மணி நேரம்தானே ஆகிறது. சாலை வசதியும் நன்றாக இருக்கிறது. அமைச்சர் என்பதால் சட்டத்திற்கு மேலானவர் அல்ல. அப்படிப்பட்ட எண்ணம் மக்களிடம் உருவாகக் கூடாது” என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.நீதிபதியின் இந்தக் கடுமையான கருத்துகளுக்குப் பிறகு அமைச்சர் தரப்பு பதிலளித்தது. ஆகஸ்ட் 31க்குப் பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாக உறுதியளித்தது. மேலும் சகோதரரைத் தாக்கிய வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவையும் திரும்பப் பெற்றது. இதையடுத்து விசாரணை முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: "லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!