மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இரண்டாவது முறையாக பரிந்துரை செய்த நிலையிலும், திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் கடந்த 2015 முதல் மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதேபோன்ற திட்டத்தை மதுரை மற்றும் கோவையிலும் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரு நகரங்களுக்கும் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியது. பின்னர் அந்த அறிக்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைத்தது.
மதுரையில் திருமங்கலம் முதல் யானைமலை ஒத்தக்கடை வரை சுமார் 31.93 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் பெரும்பகுதி உயர்மட்ட பாலம் வழியாகவும், ஒரு பகுதி சுரங்கப் பாதையாகவும் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. மொத்தம் 23 மெட்ரோ நிலையங்களுடன் இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.11,360 கோடியாக கணக்கிடப்பட்டது.
இதையும் படிங்க: சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்! 6 மாநிலங்களில் முடக்கம், தமிழகத்தின் நிலை என்ன?
3
அதேபோல், கோவையில் அவிநாசி சாலை–கருமத்தம்பட்டி மற்றும் உக்கடம்–வலியம்பாளையம் வரை சுமார் 39 கிலோமீட்டர் நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ சேவையை இயக்க திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தில் 32 நிலையங்கள் இடம்பெறவுள்ளதுடன், ரூ.10,740 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
முன்னதாக, திட்ட அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசு, மெட்ரோ திட்டம் செயல்படுத்த வேண்டிய தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி கோப்புகளை திருப்பி அனுப்பியிருந்தது. குறிப்பாக, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ திட்டம் பொருத்தமானது என்ற நிபந்தனையை குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழக அரசு திருத்தங்களுடன் மீண்டும் பரிந்துரை செய்திருந்தாலும், மதுரை மற்றும் கோவையில் தற்போதைய மக்கள்தொகை மற்றும் பயணிகள் தேவை மெட்ரோ திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நகரங்களில் மெட்ரோவுக்கு பதிலாக பேருந்து போக்குவரத்தை நவீனப்படுத்தி மேம்படுத்துவது நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் என்றும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை இறுதி நிலை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு!! 8 மாத கர்ப்பம்! 19 வயது பெண் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!