மேல்மா சிப்காட் விவகாரத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் 3-ஆம் கட்ட தொழிற்பூங்கா அமைப்பதற்காக, மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமார் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், 2026 செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான தமிழ்நாடு அரசிதழில், மேல்மா கிராமத்தில் அலகு 1, பிளாக் 2-ல் உள்ள 22.16 ஹெக்டேர் நிலங்களை சிப்காட் செய்யாறு தொழிற்பூங்கா நிலை-3க்காக கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சர் தொகுதியில் இப்படியா?... கொதித்தெழுந்த பெரம்பூர் மக்கள்... நடுரோட்டில் ஆவேசம்...!
இந்த அறிவிக்கை வெளியானதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதனை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் 22.16 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முன்னதாக, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில், அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.
மேலும், 2025 ஜூலையில் நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேல்மா பகுதியில் நிலக் கையகப்படுத்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது விவாதத்துக்கு உள்ளானது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு தற்போது அந்த அறிவிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!