தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோவில்களில், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் சுமார் 52 பெரிய கோவில்களில் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், காஞ்சிபுரம் காமாட்சி மற்றும் வரதராஜர் கோவில்கள், சென்னை வடபழனி, மயிலாப்பூர் கபாலீசுவரர் உள்ளிட்ட பல பிரபல கோவில்கள் இதில் அடங்கும்.
இந்த முடிவுக்கு முக்கிய காரணம் கோவில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிக சூழலை பாதுகாப்பதே ஆகும். ஏற்கனவே செல்போன் பயன்பாட்டிற்கு தடை இருந்தபோதிலும், பலர் புகைப்படம், வீடியோ, செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக புகார்கள் வந்தன. இதனால் மற்ற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதோடு, கருவறை மற்றும் தெய்வ சிலைகளின் புனிதமும் பாதிக்கப்படுவதாக அறநிலையத்துறை சுட்டிக்காட்டியது. மதுரை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நுழைவு வாயில்கள் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும். சில கோவில்களில் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை அமைப்பு (ITMS) மூலம் ரசீதுகளும் முக அடையாள தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: நேபாளத்தை விழுங்கிய வெள்ளம் எப்படி உருவானது? சீனாவின் ட்ரோன் கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!

பெரிய கோவில்களில் சுமார் 20 ஆயிரம் செல்போன்களை வைக்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருந்தாலும், திருவிழா காலங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும்போது இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், உள்ளூர் பக்தர்கள் வீட்டிலும், வெளியூர் பக்தர்கள் விடுதி அல்லது கார்களிலும் செல்போன்களை விட்டுவிட்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகைகள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விதிமீறல் செய்து புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுடன் அனுமதி பெற்ற அதிகாரிகள் மட்டுமே செல்ல முடியும். கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. வெளியே கோபுரம் தெரியும்படி மட்டும் படம் எடுக்கலாம்.
விழாக்காலங்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊடக அனுமதி வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இந்த நடவடிக்கை பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கும், ரீல்ஸ் போன்ற செயல்களைத் தடுப்பதற்கும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒத்துழைப்புடன் கோவில்களின் ஆன்மிக சூழலைப் பாதுகாக்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்த நாசாவின் புதிய Telescope.. பிரபஞ்சத்தின் மறைந்த ரகசியங்களை தேடும் ரோமன்!!