மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கும், புனே மற்றும் சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜூலை 7-ஆம் தேதி வரை கனமழை தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கனமழை காரணமாக மும்பை, தானே மற்றும் புனே பகுதிகளில் மழை தொடர்பான விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். செம்பூர் பகுதியில் பலத்த காற்றால் மரம் பள்ளிப் பேருந்தின் மீது விழுந்ததில் 11 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், திறந்திருந்த சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்த முதியவர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தில் அதிதீவிர மழை: திடீர் வெள்ளம், நிலச்சரிவு..!! 3 பேர் மாயம்..!!
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, நகரின் மழைநீர் வடிகால் அமைப்பில் உள்ள குறைபாடுகள் மற்றும் நிர்வாக அலட்சியம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) சில அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் விக்ரோலியில் 143 மி.மீ., கட்கோபரில் 136.4 மி.மீ., செம்பூரில் 127.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தாதர், பரேல், ஹிந்த்மாதா, அந்தேரி, கோரேகான் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. மேலும், மும்பை மெட்ரோ 2ஏ சேவை தொழில்நுட்பக் கோளாறால் சுமார் 90 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மீண்டும் இயக்கப்பட்டது. புறநகர் ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மும்பை, தானே மற்றும் கல்யாண் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அவசர உதவிக்கு 1916 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, தொடர்ச்சியான மழையால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏழு முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்திருப்பது, எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!