மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் மூலம் வெளியிட்டார்.
அந்த பதிவில், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கூடவுள்ளதாகவும், நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விவாதங்களும் ஆலோசனைகளும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த சட்ட மசோதாக்கள் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதேபோல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் மறுவரையறை தொடர்பான மசோதாவும், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (எப்சிஆர்ஏ) தொடர்பான திருத்த மசோதாவும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!

கடந்த கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அம்சங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும், அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற தேவையான சிறப்பு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அந்த முயற்சி வெற்றியடையவில்லை.
இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) அணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிற கட்சிகளின் ஆதரவையும் உறுதி செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீண்டநாளாக நிலுவையில் உள்ள முக்கிய அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றும் நோக்கத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மத்திய அரசின் அதிரடி முடிவு..!! பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கம்..!!