விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் செயல்பட்டு வரும் 'கிருஷ்ணா' பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.

நமஸ்கரித்தான்பட்டி கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஆலை அறைகளில் வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு காரணமாகப் பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறி விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு!
இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தில் கட்டிட அறைகள் தரைமட்டமானதில், அங்குப் பணியாற்றிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். விபத்து நடந்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்ந்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாலும், அடர்ந்த புகை மூட்டம் நிலவியதாலும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுவதில் தொய்வு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் போராடித் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்த ஒரு தொழிலாளி மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான முதன்மைக் காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து!" - பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!