ஐ.நா., விசாரணை வேண்டாம்.! நாங்களே பார்த்துக்குறோம்! ஏர் இந்தியா விமான விபத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. ஜூன் 12ல் விபத்து நடந்த நிலையில், அடுத்த 28 மணி நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவ கல்லூரியின் கூரையில் இருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. ஆனால் அது சேதமடைந்த நிலையில் இருந்தது என நிபுணர்கள் கூறினர். வெளிநாடு அனுப்பப்பட்டு அதில் உள்ள தகவல் மீட்கப்படும் என தகவல் வெளியானது.
ஏனென்றால் விமானத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் கருப்பு பெட்டியில் தான் பதிவாகி இருக்கும். அதில் உள்ள தகவலை மீட்டால் மட்டுமே கடைசி நொடியில் என்ன நடந்தது? விமானம் எதனால் விபத்தில் சிக்கியது என்பதை அறிய முடியும்.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி அதில் உள்ள தரவுகளை மீட்க மத்திய அரசு விரும்பவில்லை. AAIB எனப்படும் விமான விபத்து விசாரணை முகமை மூலமாகவே கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளை மீட்கும் பணி நடந்தது.
இதையும் படிங்க: விமான விபத்தில் கருகிய உடல்கள்.. டாடா குழும தலைவர் எழுதிய உருக்கமான கடிதம்!
இதற்கென பலதுறை நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ATC எனப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர், அமெரிக்க புலனாய்வு நிறுவன பிரதிநிதிகள், மருத்துவர் உள்ளிட்ட பலர் அங்கம் வகித்தனர்.
இந்திய விமான விபத்து விசாரணை முகமையின் இயக்குநர் ஜெனரல் யுகந்தர் தலைமையிலான இந்த குழு ஜூன் 24ம் தேதி மாலை கருப்பு பெட்டி தரவுகளை மீட்கும் பணியில் இறங்கியது. ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேதமடைந்த அதில் இருந்து வெற்றிகரமாக தகவல் மீட்கப்பட்டது என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. முதலில் CPM எனப்படும் விமான பாதுகாப்பு தொகுதி பிரித்து எடுக்கப்பட்டது.
அதில் இருந்து விமானத்தின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவாகும் மெமரி அமைப்பு அணுகப்பட்டது. விமானிகள் பேசுவது பதிவாகும் Cockpit Voice Recorder மற்றும் விமானத்தின் மொத்த ஜாதகத்தையும் சொல்லும் Flight Data Recorder பதிவுகள் மீட்கப்பட்டது. இதனை கொண்டு விமான விபத்து நடப்பதுக்கு முன்னாள் நொடிக்கு நொடி என்ன நடந்தது என்பதை பகுப்பாய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் விமான விபத்துக்கான காரணம் தெரியும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுப்பது பற்றிய ஆய்வுகளுக்கு தேவையான தரவுகளை வழங்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவ ஐ.நா., விமான போக்குவரத்து ஆணையம் முன்வந்தது. ஆனால், இதனை மத்திய அரசு நிராகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் விதிகளை பின்பற்றி, உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான விமான விபத்துக்களின் முதற்கட்ட அறிக்கைகள், விபத்து நடந்த 30 நாட்களுக்குள் வெளியிடப்படும். அந்த வகையில், கருப்பு பெட்டியில் இருக்கும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் ஏர் இந்தியா விமான விபத்துக்கான முதற்கட்ட அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகை உலுக்கிய விமான விபத்து.. டி.என்.ஏ சோதனையால் கண்டறியப்பட்ட 198 உடல்கள் ஒப்படைப்பு..!