நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே நான்காம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகத்தை பொறுத்தவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் அகில இந்திய அளவில் ராஜஸ்தானை சேர்ந்த மாணவர் மகேஷ் குமார், 700 க்கு 686 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் கடினமான வினாத்தாள் காரணமாக ஒருவர் கூட முழு மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் இந்திய அளவில் 27 வது இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை.. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன மாணவர்கள்..!

தமிழகத்திலிருந்து 1.35 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் சுமார் 76 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு 67 பேர் முழு மதிப்பெண் எடுத்த நிலையில், இந்த ஆண்டு ஒருவர் கூட முழு மதிப்பெண் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!