நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு என்பது மாணவர்களை ஏமாற்றுவதற்கான ஒரு வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் அதன் தலைவரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மலையரசன் மற்றும் குழுவின் துணைத் தலைவரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை. ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எம்பி-க்களின் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்துதல், சுகாதாரத் திட்டங்களில் தீவிர கவனம் செலுத்துதல், குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இயற்கை விவசாய விழிப்புணர்வு குறித்து இக்கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார் பேசுகையில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் அதிகம் சார்ந்திருக்கும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் கடந்த ஆண்டில் சராசரியாக 26 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இத்திட்டத்தின் பெயரையும் கட்டமைப்பையும் மாற்றி நடைமுறைப்படுத்தி வரும் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 77 லட்சம் மனித சக்தி நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 54.45 லட்சம் மனித சக்தி நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற ஏழை எளிய குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் அடுத்த அதிரடி திருப்பம்! அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்கிங் பதில்!
தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசு நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக அமைத்துள்ள உயர்மட்டக் குழு என்பது மாணவர்களை ஏமாற்றுவதற்காகப் போடப்பட்ட ஒரு கண் துடைப்பு நாடகமாகும். மாணவர்கள் நம்மை விட மிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மாணவர்களை ஏமாற்றிவிடலாம் என மத்திய அரசு நினைத்தால், இறுதியில் அவர்களே தான் ஏமாந்து போவார்கள் எனக் கடுமையாகச் சாடினார்.
இதையும் படிங்க: "சமூக ஊடகங்களுக்குப் பூட்டு போடுங்க!" - 16 வயதுக்குட்பட்டோருக்குத் தடை விதிக்க அன்புமணி கோரிக்கை!