நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, அங்கு சென்ற இந்தியர்கள் பலரின் நிலை குறித்து தகவல் கிடைக்காமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 84 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் போட்டேகோஷி ஆற்றில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் பெரும் அழிவு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகள், கடைகள், ஓட்டல்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திடீர் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த பலர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கினர்.
இந்த பேரிடரில் தமிழகத்தில் இருந்து ஆன்மிக யாத்திரைக்காக நேபாளம் சென்றவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பாக குடும்பத்தினரிடையே கவலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நேபாள அரசின் திடீர் U டர்ன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு பச்சைக்கொடி

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட தகவலில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களில் இதுவரை 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 149 இந்தியர்கள் சீனாவை கடந்து நேபாளத்தை வந்தடைந்துள்ளதாகவும், சுமார் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் 320 இந்தியர்களை தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் காணாமல் போனதாக கருதப்படும் இந்தியர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நேபாளம் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 10 டன் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படையின் C-130 ரக விமானம் நேபாளத்துக்கு புறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தொடர்பு கொள்ள முடியாத 320 இந்தியர்களின் நிலை என்ன என்பது தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது. அவர்களை விரைவாக கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: உடைந்தது திபெத் அணை! மீட்புப் பணியை நிறுத்துங்க! பாதுகாப்பான இடத்துக்கு போங்க! நேபாளத்தில் அவசர எச்சரிக்கை!