உலகெங்கும் உள்ள உழைப்பாளர்களால் மே தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மே தினக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்துப் பரபரப்பான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவில் மோடி அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொழிலாளர்கள் கொந்தளிப்பான நிலையில் போராடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறைகளால் அந்தப் போராட்டங்களை ஒடுக்க முடியாது என்றார். "தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வந்தாலும், அவை அனைத்தும் ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. அது, பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதுதான்" என்று அவர் கூறினார். மோடியும் அமித்ஷாவும் என்ன வேடமிட்டாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது என்றும், மே 4-ஆம் தேதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், "இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு செல்வாக்கு இருப்பதையும், அவர்களுக்கு வாக்கு பலம் அதிகரித்திருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார். இருப்பினும், அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற சில கருத்துக்கணிப்புகளைத் தான் ஏற்கவில்லை என்றும், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!
புதிதாக அமையவுள்ள அரசு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பதவிப் பறிப்புப் படலம்: அதிருப்தி எம்.பி-க்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் ஆம் ஆத்மி!