தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தமிழக காங்கிரஸில் திடீரென மவுசு பெருகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நீண்ட காலம் அமைச்சராக பதவி வகித்த சிதம்பரம், 2006, 2011 சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2009 லோக்சபா தேர்தல்களில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்கு வகித்தவர்.
அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் செல்வாக்கும் அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தது. இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் நிரம்பி வழிந்தனர். ஆனால் 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்த பிறகு சிதம்பரத்தின் அரசியல் நடவடிக்கைகள் குறைந்து போயின. தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் தோற்றதால் அவரை அரசியல் அரங்கில் அதிகம் காண முடியவில்லை.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி முனைப்பு காட்டியபோது, சிதம்பரம் தலையிட்டார். த.வெ.க.வுடன் செல்லும் முயற்சியைத் தடுத்து, சோனியா காந்தியை அணுகி, கூட்டணியை தி.மு.க. தலைமையில் உறுதிப்படுத்தினார். இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு சிதம்பரம் நெருக்கமானவராக மாறினார்.
இதையும் படிங்க: திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

புதுச்சேரியில் தி.மு.க. – காங்கிரஸ் இடையே ஏற்பட்ட பிரச்னையிலும் சிதம்பரம் தலையிட்டு ஸ்டாலினுடன் பேசி தீர்வு கண்டார். இந்த நடவடிக்கைகளால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் சிதம்பரத்துக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
தற்போது காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் “சிதம்பரத்தை பிடித்தால் சீட் உறுதி” என நம்பி அவரையும், அவரது மகன் கார்த்தியையும் அணுகி வருகின்றனர். சிதம்பரம் குறைந்தது 10 தொகுதிகளுக்கு சீட் பெற்றுத் தருவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
சிதம்பரத்தின் இந்த திடீர் உயர்வு தமிழக காங்கிரஸில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதால் இனி சீட் பங்கீட்டில் சிதம்பரத்தின் பங்கு முக்கியமாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!