சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 2021 தேர்தலில் உட்கட்சி பூசல் மற்றும் தி.மு.க. நெருக்கடியை மீறி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ஆதரவாளரான மாங்குடிக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மாங்குடி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் இந்த முறை காரைக்குடி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். சிதம்பரத்தின் சொந்த தொகுதியான காரைக்குடியில் சீமான் நிற்கும் பட்சத்தில், ப. சிதம்பரத்தை கடுமையாக விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சீமான் ஏற்கனவே சிதம்பரத்தின் செயல்பாடுகளை புள்ளிவிவரங்களுடன் தயாராக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தி.மு.க. தரப்பில் காரைக்குடியில் தங்கள் வேட்பாளரை நிறுத்துவது உறுதி என சூரியன் கட்சி தொண்டர்கள் தெருவுக்கு தெரு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காரைக்குடியில் களம் காணும் சீமான்! மார்ச் 30ல் வேட்புமனு தாக்கல்! புதுச்சேரியிலும் பிரசாரம்!

அமைச்சர் பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் தங்களுக்கு நம்பிக்கையான ஒரு கான்ட்ராக்டருக்கு சீட் வாங்க முயற்சி செய்து, சென்னை அறிவாலயம் அருகிலுள்ள ஹோட்டலில் தங்கி காத்திருக்கின்றனர். தி.மு.க. இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளும் சீட் கோரி தலைமையை நெருக்கி வருகின்றனர்.
மறுபுறம் காங்கிரஸ் நிர்வாகிகள், “காரைக்குடி மட்டுமல்ல, சிவகங்கையும் எங்களுக்குத்தான்” என உறுதியாகக் கூறுகின்றனர். “மாங்குடி மீது பொதுமக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. சொந்த தொகுதியை சிதம்பரம் விட்டுக்கொடுக்க மாட்டார்” என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சீமான் வருகை, தி.மு.க.வின் உள் பூசல், காங்கிரஸின் உரிமைக் குரல் ஆகியவை சேர்ந்து காரைக்குடி தொகுதியை மிகவும் பரபரப்பானதாக மாற்றியுள்ளன. இந்த தொகுதியில் யார் போட்டியிட்டாலும், ப. சிதம்பரத்துக்கு எதிராக சீமான் கடும் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. அதே நேரத்தில் தி.மு.க.வும் காங்கிரஸும் சீட் பங்கீட்டில் கடும் போட்டியில் உள்ளன.
காரைக்குடி தொகுதியின் இறுதி முடிவு INDIA கூட்டணியின் உள் பேச்சுவார்த்தையைப் பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சீமானின் வருகை காரணமாக இந்த தொகுதி தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீங்களா? கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜியை திணறடித்த சிபிஐ கேள்விகள்?!