தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல ஜல்லிக்கட்டு மையங்களில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நேற்று (ஜனவரி 15) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போட்டியில் 1,000 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. போட்டி 12 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறக்கப்படுவர். முதல் 11 சுற்றுகளில் அதிக காளைகளைப் பிடித்த வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூருக்கு ஸ்டாலின்! பாலமேட்டில் உதயநிதி! மதுரை ஜல்லிக்கட்டில் கொட்டப்போகும் பரிசு மழை!
சிறப்பம்சமாக, ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடித்த வீரர்களின் பெயர்கள் LED திரையில் உடனுக்குடன் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கும்.

வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாகவும், சிறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு டிராக்டர் பரிசாகவும் வழங்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், காலை 7.30 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போட்டி, 8.30 மணியைத் தாண்டியும் தொடங்கவில்லை. 9 மணி நெருங்கி வரும் நிலையில், நிர்வாகிகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். மாடுபிடி வீரர்களும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் காலை முதலே காத்திருக்கின்றனர்.
காளைகளின் உரிமையாளர்கள் கடைசி நேரத்தில் தங்கள் காளைகளை களமிறக்க முடியாமல் போய்விடுமோ என்று டென்ஷனில் உள்ளனர். துணை முதலமைச்சரின் வருகைக்காகவும், பிற ஏற்பாடுகளுக்காகவும் சிறிது தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாரம்பரிய உற்சாகத்துடன் தமிழக மக்கள் அனைவரும் இந்த வீர விளையாட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: அலங்காநல்லூருக்கு ஸ்டாலின்! பாலமேட்டில் உதயநிதி! மதுரை ஜல்லிக்கட்டில் கொட்டப்போகும் பரிசு மழை!