பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம் தொடர்பான மோசடி விவகாரம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 100 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள இந்த நிலம், நீதிமன்ற உத்தரவுகளையும் அறநிலையத்துறை எச்சரிக்கைகளையும் மீறி, வெறும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த முறைகேடு வெளிவந்தவுடன் பத்திரப்பதிவுத் துறை உடனடி நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் முன்னதாக இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன். கொடைக்கானல் சார்பதிவாளராகப் பணியாற்றி வந்த இவர், ஜூலை 6, 2026 அன்று வழக்கமான பழனி சார்பதிவாளர் விடுப்பில் இருந்தபோது, கூடுதல் பொறுப்பாகப் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டார். அன்றைய தினம் தான் மட நிலத்தைப் போலி ஆவணங்கள் அடிப்படையில் தனியாருக்குப் பதிவு செய்து கொடுத்தார். இந்தத் தகவல் வெளியானவுடன் பத்திரப்பதிவுத் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அவரைப் பணியிடை நீக்கம் செய்தனர்.

ஜூலை 13 அன்று இது தொடர்பான புகார் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு அவரது சஸ்பென்ஷன் உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது இவர் சிபிசிஐடி விசாரணையில் தொடர்ந்து ஆஜராகி வருகிறார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், தினமும் விசாரணைக்கு வரும்படி நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பதவிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய சிறப்பு தணிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பழனி கோவில் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை பணிகளை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் பத்திரப்பதிவு பணிகளை தொடங்கிய பாலச்சந்தர் மற்றும் அலுவலக உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். பாலச்சந்தர் குற்றப்பதிவிற்கான 90 சதவீத பணிகளை முடித்தவர் என குற்றம் சாட்டப்படும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!