பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து அமளியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று 9-வது நாளாகவும் லோக்சபாவில் கேள்வி நேரம் முழுமையாக நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகளை வழக்கம்போல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து, நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை மற்றும் பல்வேறு தேசிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த எட்டு நாட்களாக லோக்சபாவில் கேள்வி நேரம் முறையாக நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று 9-வது நாளாகவும் அதே நிலை நீடித்தது.
அவை கூடியவுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடைபெற்ற தடியடி சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியை ஏன் பேச விடவில்லை?"... நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கிய INDIA கூட்டணி! சூடுபிடித்த டெல்லி அரசியல்!

இதையடுத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் என்பது அனைத்து உறுப்பினர்களின் உரிமை என்றும், மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அரசிடம் பதில் பெறும் முக்கியமான வாய்ப்பை அமளியால் வீணடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். போராட்டத்தில் ஈடுபடுவது ஜனநாயக உரிமையாக இருந்தாலும், அதன் காரணமாக மற்ற உறுப்பினர்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் ஒழுங்கை ஏற்படுத்த முடியவில்லை. இதனால் லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், மாநிலங்களவை நடவடிக்கைகள் முழுமையாக முடங்காமல் தொடர்ந்து நடைபெற்றன.
தொடர்ச்சியாக ஒன்பது நாட்களாக கேள்வி நேரம் பாதிக்கப்பட்டிருப்பது, மழைக்கால கூட்டத்தொடரின் செயல்திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த நாட்களில் பாராளுமன்றம் சுமுகமாக செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வு மசோதா கண்துடைப்பு நாடகம்...! பெல்லட் குண்டு பிரச்சனை... கவுரவ் கோகாய் விளாசல்..!