இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஆக்ஸியம் - 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார். அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகியோர் என நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தனர்.

28 மணிநேர பயணத்திற்கு பின்னர் இவர்கள் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என கூறப்படுகிறது. அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இதில் இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனையொட்டி சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாழ்த்திய 140 கோடி மக்கள்.. உற்சாகமாக புறப்பட்ட விண்வெளி நாயகன் 'சுக்லா'.. பிரதமர் மோடி வாழ்த்து..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து செய்தியில், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல். நட்சத்திரங்களை நோக்கிய அவரது பயணத்தில் முழு தேசமும் உற்சாகமாகவும் பெருமையாகவும் உள்ளது. அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தின் மூலம் , அவரும் அவரது சக விண்வெளி வீரர்களும் உலகம் உண்மையில் ஒரு குடும்பம் என்பதை நிரூபிக்கிறார்கள் - 'வசுதைவ குடும்பகம்'. நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கும் இந்த பணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

குழுவினரால் செய்யப்படும் பரந்த அளவிலான சோதனைகள் அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியின் புதிய எல்லைகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியில், இந்தியா, போலந்து, ஹங்கேரி , அமெரிக்க வீரர்களை சுமந்துகொண்டு விண்வெளி பயணத்திற்காக ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், லட்சியங்களை சுபான்ஷு சுக்லா தன்னுடன் சுமந்து செல்கிறார். சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கு வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மோடி ஆட்சியில் இதெல்லாம் சட்டவிரோதமாக பறிக்கப்படுகிறது.. லிஸ்ட் போட்ட செல்வப்பெருந்தகை..!