புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்த மாதமே பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல்கள், கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகள், அமைச்சர்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தகட்டமாக சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனால், தேர்தல் அரசியலுக்கு ஏற்ப மத்திய அமைச்சரவையில் மாநிலங்கள் மற்றும் சமூகங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிராமண சமூகத்திற்கு கேபினட் அளவில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற கருத்து பாஜக வட்டாரத்தில் நிலவுகிறது. அதேபோல் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 4 அமைச்சர்களுக்கு சிக்கல்? முதல்வர் விஜய் அதிரடி திட்டம்?!

இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்த சில எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அமைச்சரவையில் சில காலியிடங்கள் உருவாகியுள்ளன. மேலும் சில அமைச்சர்களின் ராஜ்யசபா பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், அவர்களை மீண்டும் அவைக்கு கொண்டு வந்து அமைச்சரவையில் தொடர வைப்பது குறித்தும் முடிவெடுக்க வேண்டியுள்ளது.
இந்த சூழலில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. சில அமைச்சர்களின் பொறுப்புகள் குறைக்கப்படலாம்; சிலருக்கு முக்கியமான புதிய துறைகள் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்பு தேவைப்படும் சில தலைவர்கள் அமைச்சரவையில் இருந்து கட்சி பணிக்கு திரும்பக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதில் கவனம் பெற்றுள்ள பெயர் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து கல்வித்துறை பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அவருக்கு வேறு இலாகா வழங்கி மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு அருகே தர்மேந்திர பிரதானுக்கு அறை ஒதுக்கப்பட்டிருப்பதும் இந்த யூகத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!