அவ்வப்போது பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக, மொபைல் ரீசார்ஜ் போல் ஆண்டுக்கு ரூபாய் 3000 சந்தா செலுத்தி அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஆண்டு முழுவதும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற புதிய விதியை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த பாஸ்டேக் அடிப்படையிலான பாஸ், வரும் ஆகஸ்டு 15 முதல் நடைமுறைக்கு வரும். அந்த பாஸ் செயல்பாட்டுக்கு வந்த தேதியில் இருந்து ஓராண்டுக்கோ அல்லது 200 பயணமோ, எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் செல்லுபடியாகும். கார், ஜீப் மற்றும் வேன்கள் போன்ற வணிகம் சாராத தனியார் வாகனங்களுக்காக இந்த பாஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார்.

மேலும் ஒரு சுங்க சாவடியை வாகனம் கடந்து சென்று விட்டால் அது ஒரு பயணம் என கணக்கில் கொள்ளப்படும். இதனால் காத்திருப்பு நேரம் குறைதல், போக்குவரத்து நெருக்கடி நீங்குதல் மற்றும் சுங்க சாவடிகளில் வாக்குவாதங்கள் குறைதல் போன்ற எளிமையான சூழல் ஏற்படும். மேலும் இந்த பாஸ், கோடிக்கணக்கான தனியார் வாகன உரிமையாளர்கள் விரைவாக மற்றும் சுமுக பயண அனுபவம் பெறுவதற்கான நோக்கம் கொண்டது என கட்கரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ரீசார்ஜ்.. ரூ.3000 தான்.. வருஷம் ஃபுல்லா ஃப்ரீயா போகலாம்.. 'பாஸ்டேக்'கில் வந்தாச்சு புது ரூல்..!
இதற்காக, ராஜ்மார்க் யாத்ரா செயலி, இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் லிங்க் ஒன்று ஏற்படுத்தப்படும். இதனை கொண்டு, இந்த பாஸ்-ஐ எளிதில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், புதுப்பித்து கொள்ளவும் முடியும் என கட்கரி கூறியுள்ளார்.

இந்நிலையில் பாஸ்டேக்கில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 என்ற அறிவிப்பிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
தனியார் வாகனங்களை பொறுத்தவரை (ஓன் போர்டு வாகனங்கள் உள்ளிட்டவைகள்) சுங்கச்சாவடியை பயன்படுத்தும் காலம் சொற்பமாக உள்ளதால் இந்த கட்டணம் மிகவும் கூடுதலான தொகையாகும். எனவே இந்த வாகனங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1,500 வீதம் நடைமுறைப்படுத்துவதே சிறந்த வழிமுறை என கருதுகிறேன்.

அதோடு, மேலே குறிப்பிட்ட தனியார் வாகனங்களுக்கு 3,000 ரூபாய் ஆண்டுக்கு கட்டணம் என்பதனை வணிக மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு பயன்படும் வகையில் நடைமுறைப்படுத்தினால் அவர்களுக்கான நிதி சுமை குறையும் என்பதனை கருத்தில் கொண்டு இதனை நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ரீசார்ஜ்.. வருஷம் ஃபுல்லா ஜாலி ரைடு... 'பாஸ்டேக்'கில் வருகிறதா புது ரூல்..?