தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும் அதிகபட்சமான வாக்குகள் பதிவாகின. 85 சதவீத வாக்குப்பதிவு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று 62 மையங்களில் எண்ணப்படவுள்ளன.
இவற்றை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு, மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும்.
அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கமாக தபால் வாக்குகளை திமுக வெல்வது வழக்கமானது. அதாவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் ஆதரவு திமுகவுக்கு இருந்து வந்தது. இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இந்த முறை அரசு ஊழியர்களின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே தபால் வாக்குகளில் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை வைத்துதான் அரசு ஊழியர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என தெரியவரும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாற்றத்தின் புயல்: பழைய அரசியல் மரபுகள் வீழ்ச்சி! - ஆதவ் அர்ஜுனா..!!
குறிப்பாக அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். மேலும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்வைத்துள்ளார். அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்படும், பணி நிரந்தரம் மற்றும் OPS வாக்குறுதிகளை, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் காலையிலேயே களமிறங்கிய உதயநிதி... படையுடன் மதுரை மேற்கில் இறங்கிய செல்லூர் ராஜு...!