கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அநியாயமாகக் கைது செய்துள்ள சம்பவம் கடலோரப் பகுதியில் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்றிரவு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!
மத்திய அரசு உடனடியாகத் தூதரக மட்டத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதத்தில் முதல்வர் மிக அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கைக் கடற்படையின் இந்தத் தொடர் கெடுபிடிகளும் கைது நடவடிக்கைகளும் பாக் ஜலசந்திப் பகுதியில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த பாதுகாப்பற்ற உணர்வையும், சொல்லொணா அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகத் தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறித் தமிழக உழைப்பாளர்களை அச்சுறுத்தும் இலங்கை அரசின் இத்தகைய போக்கிற்கு நிரந்தர ராஜதந்திரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தொடர்ந்து அரங்கேறும் இத்தகைய சிறைபிடிப்புச் சம்பவங்களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவக் குடும்பங்களின் கவலையைப் போக்கக் களத்தில் மத்திய அரசு உடனடியாக இறங்க வேண்டும் என்று அரசியல் வட்டாரத்திலும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைதை தடுத்து நிறுத்துக! மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி கோரிக்கை!