நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் முன்னிரவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தங்களது கனவுகளை நனவாக்க வேண்டும் என்றும், நமது நாட்டை உலகின் முன்னணி நாடாக மாற்ற அயராது பாடுபட வேண்டும் என்றும், அதுவே உண்மையான சுதந்திரத்தின் பொருள் என்றும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான இன்று ஆற்றிய சிறப்பு உரையில் அவர், ஆகஸ்ட் 14-ஆம் தேதியான இன்று 'தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்' (Partition Horrors Remembrance Day) அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். பிரிவினையின் போது அரங்கேறிய கொடூர வன்முறைகளில் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களையும், தங்கள் சொந்த மண்ணை விட்டு அகதிகளாக வெளியேற நிர்பந்திக்கப்பட்ட மக்களின் சோகங்களையும் இந்த நாளில் தேசம் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறது என உருக்கமாகத் தெரிவித்தார். மதவாத வன்முறைகளால் கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாகி சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தங்கள் அடையாளத்தை ஒருபோதும் கைவிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பேசிய அவர், "நமது நாடு சுதந்திரம் அடைந்த வேளையில் பிரிவினையின் கடுமையான விளைவுகளையும் வடுக்களையும் தாங்கியதோடு மட்டுமல்லாமல், 550-க்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து ஒரே பாரதமாக உருவாக்குவது என்பது அப்போதைய சுதந்திர இந்தியாவிற்கு முன்னால் இருந்த மாபெரும் மற்றும் அசாதாரண சவாலாக விளங்கியது" என வரலாற்றுப் பின்னணியை நினைவுகூர்ந்தார். சவால்களைக் கடந்து வலிமையான தேசமாக உருவெடுத்துள்ள இந்தியாவில், குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை உலக அரங்கில் முதன்மை நிலைக்குக் கொண்டு செல்ல உறுதி ஏற்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவர் எம். கிருஷ்ணசாமிக்கு 'தகைசால் தமிழர்' விருது அறிவிப்பு!
இதையும் படிங்க: 80-வது சுதந்திர தின விழா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்து!