தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோவிலில் பக்தர்களிடம் சிறப்பு தரிசனத்துக்கு சட்டத்துக்கு புறம்பான பணம் வசூல் நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் ரகசிய ஆய்வு மேற்கொண்டார். சாதாரண உடையில் முகக்கவசம் அணிந்து பக்தரைப் போல வந்த அமைச்சரிடம் அர்ச்சகர் ஒருவர் விரைவு தரிசனத்துக்கு ரூ.4,000 பணம் கேட்டு GPay மூலம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமைச்சர் ரமேஷ் தனது அடையாளத்தை வெளிப்படுத்திய பிறகு, சம்பந்தப்பட்ட அர்ச்சகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அர்ச்சகருக்கு கோவிலுக்குள் பணி செய்ய தடை விதிக்கப்பட்டது, சில ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், மேலும் போலீஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை கோவில் நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் அரசின் உறுதியான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக பார்க்கப்பட்டது. அமைச்சர் முழு கோவிலையும் ஆய்வு செய்து, பக்தர்கள் வசதிகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
இந்த சம்பவத்துக்கு திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருச்செந்தூர் கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அமைச்சர் ரமேஷுக்கு கண்டனங்கள். ஆய்வு என்ற பெயரில் அர்ச்சகர்களை இழிவுபடுத்தியுள்ளார். திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டார். இதில் அமைச்சர் ரமேஷை “ரமேஷ் ஐயங்கார்” எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அமைச்சரிடமே வசூல்..! கல்லா கட்டிய திருச்செந்தூர் அர்ச்சகர் சஸ்பெண்ட்..! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

அதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்bஅனிதா ராதாகிருஷ்ணன் அவர்களே உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது என்றும் மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை என்றார். நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன் என்றும் அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிராமணராக இருப்பதால் அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?... பெரியார் பெயரைச் சொல்லி ‘ஸ்ரீரங்கம் ரமேஷ்’ கொடுத்த பதிலடி...!