நெல்லை நாங்குநேரி பயங்கரத்தை தொடர்ந்து சிவகங்கை மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்டியலின மக்கள் அதிகம் வசித்து வரும் இந்த பகுதிக்குள் புகுந்த 3 பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் ஒரு தரப்பினர் மீது சிலர் கையில் வாள், அரிவாளுடன் விரட்டி விரட்டி தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காட்டூரில் கடந்த மார்ச் 3 ம் தேதி இரவு ராஜு என்பவர் ரோட்டோரம் நின்றுள்ளார். அந்த வழியாக புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் டூ வீலர்களில் வந்துள்ளனர். அவர்கள் ராஜூவிடம் தகராறு செய்ததையடுத்து பயந்து போன ராஜு அருகில் உள்ள தனது வீட்டிற்கு ஓடியுள்ளார்.
அவரை விரட்டி வந்த இளைஞர்கள் தட்டி கேட்ட அப்பகுதி பொதுமக்களை வெட்டியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு எதுவும் பதியாமல் விசாரித்து வந்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட யாரையும் பிடிக்கவும் இல்லை. ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் இன்று காலை தாக்குதல் சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகிய சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
நாங்குநேரி சம்பவம்:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு பகுதியில் கஞ்சா போதையில் இருந்த 9 பேர் கொண்ட கும்பல், அவர்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை அரிவாளால் வெட்டியதோடு அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டனர். மூன்று இருசக்கர வாகனங்களில் 9 பேர் கொண்ட கும்பல் நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் உள்ள தேனீர் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த நபர்கள் மீது சரமாறியாக அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஜான் என்ற மாற்றுத்திறனாளி பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அங்கு கூடியிருந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, புளியங்குளத்தைச் சேர்ந்த சசிகுமார், மற்றும் வீராங்குளத்தை கணேசன் ஆகிய நபர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் நெல்சன் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கஞ்சா போதை கும்பல் நடத்திய கொலை வெறியாட்டம் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நாங்குநேரி சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாக மானாமதுரையில் பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமத்திற்குள் வெறியாட்டம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இனிமே கிடையாது... தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம்... தமிழக அரசு கறார்..!!