தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், சசிகலா தொடங்கிய புதிய கட்சியின் செயல்பாடு அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தவெக யார் ஓட்டை பிரிக்கும் என திமுகவும் அதிமுகவும் கவலைப்பட்டு வரும் வேளையில், சசிகலாவின் கட்சி முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாக பிரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பரில் அமமுக தலைவர் தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தேஜ கூட்டணியில் இருந்து விலகினர். அதன் பிறகு சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் மூவரும் இணைந்து ஒரே அணியாக தேர்தலை எதிர்கொள்வார்கள் என முக்குலத்தோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படி இணைந்தால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் பேசின.
ஆனால் பழைய கசப்புகள் மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக மூவரும் ஒன்றிணைய முடியவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியே தங்கள் அரசியல் முடிவுகளை எடுத்தனர். சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய ஆர்வம் காட்டினாலும், பழனிசாமி தரப்பு அதை ஏற்கவில்லை. இதனிடையே பாஜக அழுத்தத்தால் தினகரன் மீண்டும் தேஜ கூட்டணியில் சேர்ந்தார். பன்னீர்செல்வம் திமுக பக்கம் சாய்வதாக தகவல் வந்ததும், சசிகலா புதிய கட்சியைத் தொடங்கினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வீட்டில் சபரீசன் முக்கிய மீட்டிங்! உளவுத்துறை அறிக்கை குறித்து ஆலோசனை! டீல் ரெடி?!
ஆரம்பத்தில் பழனிசாமி தரப்பு சசிகலாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சசிகலா தனது அரசியல் அனுபவம், ஜாதி பின்புலம் மற்றும் பண பலத்தை முழுமையாக பயன்படுத்தி 71 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் தொகுதிகளில் செல்வாக்கு உள்ளவர்கள்.

திருவாடானை தொகுதியில் சுரேஷ் தேவர் வேட்பு மனு தாக்கல் செய்ய 200 கார்களுடன் சென்றது முக்குலத்தோர் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சாத்தூர் தொகுதியில் இசக்கி ராஜா, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பகுதியில் பட்டியலின மக்கள் மற்றும் முக்குலத்தோர் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வந்தவர் என்பதால் அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இன்றைய நிலவரப்படி, நன்னிலம், உசிலம்பட்டி, சிவகாசி, சாத்தூர், முதுகுளத்தூர், திருவாடானை உள்ளிட்ட பல தொகுதிகளில் சசிகலா வேட்பாளர்கள் 7,000 முதல் 35,000 வரை முக்குலத்தோர் ஓட்டுகளை பிரிக்கக்கூடும் என அதிமுக வட்டாரங்கள் கணக்கிடுகின்றன. மேலும் சசிகலா பிரசாரத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கூடும் அளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிமுக வேட்பாளர்கள் பணப் பற்றாக்குறையால் தடுமாறும் நிலையில், சசிகலா தரப்பு நிதி உதவியுடன் தாராளமாக செலவு செய்து வருகிறது. நான்கு முனை போட்டியில் சில ஆயிரம் அல்லது சில நூறு ஓட்டுகள் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சூழலில், சசிகலா கட்சியின் வருகை அதிமுகவுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடிக்கு சோஃபா!! தினகரனுக்கு மட்டும் பிளாஸ்டிக் சேரா? கூட்டணிக்குள் குண்டு வைக்கும் திமுக!!