இந்தியாவின் அஞ்சல் துறை பல கோடி மக்களுக்கு சேவை செய்யும் துறை என்றும் கடந்த நிதியாண்டில் சுமார் 2300 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டியுள்ளது எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேலும், லாபம் ஈட்டும் நோக்கத்தோடு சமீபத்தில், ஒன்றிய பாஜக அரசு இந்திய அஞ்சல் துறை பதிவு அஞ்சல் (Registered Post) சேவையை நிறுத்தி, மக்கள் துரிதஅஞ்சல் (Speed Post) சேவையை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது என்றும் கூறினார்.
இதன் மூலம், வறுமை நிலையில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்விதுறை நிர்வாகம், நிதித்துறை, வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோர்கள் கடிதங்கள், விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை அனுப்புவதற்கு இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் மத்திய பாஜக அரசு பொதுமக்களிடமிருந்து பணத்தை பறிக்கும் கொள்கையாக வைத்திருக்கிறது என்று கூறினார்.

பதிவு அஞ்சல் மற்றும் துரிதஅஞ்சல் இரண்டிற்கும் விநியோகம் செய்வதில் உள்ள நேரம் வேறுபாடு பெரிதாக இல்லாதபோதிலும், கட்டணங்களில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது என்றும் பதிவு அஞ்சல் கட்டணம் சுமார் ரூபாய் 45 மட்டுமே இருந்த நிலையில், துரித அஞ்சலுக்கு ரூபாய் 85 வரை வசூலிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். ஒப்புதல் அட்டை கட்டணமும் ரூபாய் 3 இருந்து ரூபாய் 11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மேலும், இதனுடன் 18சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணமோசடி வழக்கு! பிடியை இறுக்கும் ED! அனில் அம்பானிக்கு 2வது முறையாக நோட்டீஸ்!
எனவே, அஞ்சல் துறையின் இந்த முடிவு சமூகநீதிக்கும், கல்வியறிவு வளர்ச்சிக்கும் எதிரானது என செல்வப் பெருந்தகை கூறியுள்ளார். எனவே, ஒன்றிய அரசும் அஞ்சல் துறையும் இந்த அநீதி முடிவை உடனடியாக ரத்து செய்து, பதிவு அஞ்சல் சேவையை மீண்டும் தொடங்கவும், துரித அஞ்சல் கட்டணங்களை குறைக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தினார். இது வெறும் கட்டண உயர்வு அல்ல என்றும் இந்தியாவின் ஏழை மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதார சுரண்டல் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவை கரித்து கொட்டும் ட்ரம்ப்!! ஜி 20 உச்சிமாநாடு புறக்கணிப்பு!! அதிபர் சொல்லும் காரணம்?!