தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பட்டியலில் சென்னை மதுரவாயல் சட்டசபை தொகுதியில் 150-வது வார்டு, காரம்பாக்கம் பகுதி, பாகம் எண் 80-ல் ஒரே நபரின் பெயர் எட்டு முறை தனித்தனி வாக்காளர் அடையாள அட்டை எண்களுடன் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளறுபடி அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இறுதி பட்டியல் வெளியான பிறகே இத்தகைய பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியின் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஒரே நபருக்கு 8 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது போல் தோன்றும் இந்த பதிவு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு என்று வட்டாட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரவாயல் வட்டாட்சியர் இது குறித்து கூறுகையில், “வாக்காளர் தகவல்களை பதிவு செய்யும் போது சர்வர் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதனால் ஒரே நபரின் பெயர் பலமுறை பதிவாகியிருக்க வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட பாகத்தின் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இடம்பெற்றிருந்தால் உடனடியாக நீக்கம் செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க: திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

இந்த சம்பவம் தேர்தல் ஆணையத்தின் தரவு மேலாண்மை மீது கேள்வியை எழுப்பியுள்ளது. மதுரவாயல் தொகுதியில் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது ஒரே நபரின் பெயர் எட்டு முறை இடம்பெற்றிருப்பது தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அரசியல் கட்சிகள் இதை தீவிரமாக கவனித்து வருகின்றன. தவறு உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக உள்ளது.
தேர்தல் ஆணையம் இதுபோன்ற கோளாறுகளை தவிர்க்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை மீது பெரும் சந்தேகம் எழும். மதுரவாயல் தொகுதி மக்கள் இப்போது தங்கள் வாக்குரிமை பாதுகாக்கப்படுமா என்பதை உறுதியாக அறிய காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக துணை பொதுச்செயலாளார் ஓபிஎஸ்?! அதற்குள் பதவியா? தேனி, போடியில் மீண்டும் போட்டி?!