தமிழக அரசியலில் இன்று அரங்கேறிய ஓ. பன்னீர்செல்வத்தின் (ஓபிஎஸ்) அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்று முடிவுகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று முறைப்படி மீண்டும் அதிமுக-வில் (இபிஎஸ் அணி) இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த வெல்லமண்டி நடராஜன், பூங்கொத்து வழங்கித் தன்னை மீண்டும் அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். இபிஎஸ் அவருக்குக் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி உற்சாகமாக வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வம் இன்று முறைப்படி திமுக-வில் இணைந்ததை வெல்லமண்டி நடராஜன் கடுமையாக எதிர்த்துள்ளார். ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட விசுவாசிகள் ஒருபோதும் திமுக-வில் இணைய மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்ததே இந்தத் தாய் கழகத் திரும்புதலுக்குக் காரணம் எனத் தெரிகிறது.

திருச்சியில் செல்வாக்கு மிக்கப் புள்ளியாகக் கருதப்படும் வெல்லமண்டி நடராஜனின் வருகை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் இருந்த முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலானத் தாய் கழகத்திற்குத் திரும்பி வருவது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனிமரம் தோப்பாகாது...ஓபிஎஸ் திமுக-வில் இணைந்தது குறித்து ஜான் பாண்டியன் விமர்சனம்!
ஓபிஎஸ்-ன் திமுக இணைப்புப் படலத்திற்கு நடுவே, வெல்லமண்டி நடராஜன் மீண்டும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக-விற்கு வந்தது, தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிமுக-விற்கு அரசியல் ரீதியாகப் புதிய தெம்பைக் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!