சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ஓட்டுப்பதிவு முடிந்த அடுத்த நாளே அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தொகுதிகளின் நிலவரம், ஓட்டுப்பதிவு சதவீதம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
சந்திப்பின்போது சில தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சரியாக பணியாற்றவில்லை என்று வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சென்னை பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் சார்பில் கடும் அதிருப்தி வெளியானது. அங்கு 14 வட்டச் செயலர்களில் சிலர் ஓட்டுப்பதிவு நாளில் சரியாக செயல்படவில்லை என்றும், சிலர் ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது உதவியாளர் செந்தில் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இளைஞரணி மாநில நிர்வாகி ஜோயல் தலைமையில் 150 இளைஞர்கள் தீவிர பணியாற்றினர். ஆனால் ஓட்டுப்பதிவுக்கு முன்பு வெளியூர் பணியாளர்கள் வெளியேறிய பின்னர், உள்ளூர் நிர்வாகிகளின் செயல்பாடு மந்தமாகியதாக வேட்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் கொடுத்த பணத்தை சுருட்டிய திமுக நிர்வாகிகள்! தூத்துக்குடியில் தவெகவுக்கு தான் ஓட்டு! திமுக நிர்வாகி பகீர்!

இதனால் பெரம்பூரில் தி.மு.க.வுக்கு சவால் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சி வட்டாரங்கள் பேசுகின்றன. தோல்வி ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், துறைமுகம் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான சேகர்பாபு மற்றும் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் இடையே ஓட்டுப்பதிவின்போது ஏற்பட்ட மோதல் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். சென்னையில் தமிழக வெற்றி கழகத்துக்கு (த.வெ.க.) கணிசமான ஓட்டுகள் கிடைத்ததால் ஏழெட்டு தொகுதிகளில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சம் கட்சியினரிடையே எழுந்துள்ளது.
இந்த சந்திப்பில் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளின் உண்மை நிலவரத்தை நேரடியாக முதல்வரிடம் தெரிவித்தனர். தி.மு.க. உயர்மட்டம் இனி வரும் நாட்களில் இந்தப் புகார்களை தீவிரமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இத்தகைய உள்ளூர் அதிருப்திகள், வரும் முடிவுகளில் எதிரொலிக்கும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!