தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு கடற்கரை பகுதிகளில் ஓட்டு குறைவாகப் பதிவாகும் என்று அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடற்கரை பகுதிகளில் தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவு ஓட்டுகள் கிடைக்கவில்லை என்றும், அந்த ஓட்டுகள் தமிழக வெற்றி கழகத்துக்கு (த.வெ.க.) சென்றுவிட்டதாகவும் கட்சியினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஆரோக்கியதாஸ் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அமைச்சர் கீதா ஜீவனுக்கு பேசுவது போல் பாணியில் பேசிய அவர், “அக்கா, உங்கள் தந்தை நகராட்சித் தலைவராக இருந்த காலத்திலிருந்தே தி.மு.க.வுக்காக நான் பணியாற்றி வருகிறேன். இந்தத் தேர்தலில் நீங்கள் கொடுத்த பணம் முறையாக பட்டுவாடா செய்யப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தங்கினால் வெற்றி நிச்சயம்!! மு.க.ஸ்டாலின் தீவிர சென்டிமெண்ட்! இன்று குடும்பத்துடன் புறப்படுகிறார்!

வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது: “திரேஸ்புரம் 8வது வட்டச் செயலர் ரவிச்சந்திரன், 9வது வட்டச் செயலர் கருப்பசாமி, கவுன்சிலர் பவானியின் கணவர் மார்ஷல் ஆகியோர் சரியாக செயல்படவில்லை. கருப்பசாமி பணத்தை யாருக்கும் கொடுக்காமல் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
இதனால் இந்த முறை தி.மு.க.வுக்கு குறைவான ஓட்டுகளே கிடைக்கும். நீங்கள் கொடுத்த பணத்தை சிலர் சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டனர். இதற்கு உடனடி தீர்வு வழங்குங்கள்” என்றார்.
தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், “தூத்துக்குடி தொகுதியில் 60 சதவீத ஓட்டுகளை மட்டுமே கணக்கில் கொண்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மாநகரப் பொறுப்பில் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையால் பணம் சரியாகச் சென்று சேரவில்லை. கிடைத்தவர்களும் அதை முறையாக விநியோகிக்கவில்லை. கடற்கரைப் பகுதியில் த.வெ.க.வுக்கு ஏற்கெனவே ஆதரவு இருப்பது தெரிந்தும் பணப் பட்டுவாடாவில் அலட்சியம் காட்டியது தவறு” என்றனர்.
இதேவேளையில், சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ் மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “அவர் வாயில் வந்தபடி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்லி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பணப் பட்டுவாடா குறித்து நாங்கள் எதுவும் பேச முடியாது. எங்கள் நிலைப்பாடு கட்சி மேலிடத்துக்கு தெரியும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த வீடியோ வெளியான பிறகு தூத்துக்குடி தி.மு.க.வுக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட ஓட்டுப் பங்கீடு குறித்து கட்சி உயர்மட்டம் விரைவில் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு இருக்கு!! ராகுல்காந்தி பேச்சால் திமுக தலைமை ஷாக்!!