தனது தந்தை அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் புதிய உச்சத் தலைவராகப் (Supreme Leader) பொறுப்பேற்றுள்ள ஆயத்துல்லா மொஜ்தபா கமேனி, இன்று தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்ட அந்த அறிக்கையில், சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய மையமான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) தொடர்ந்து மூடி வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். இதனை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வலிமையான கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என மொஜ்தபா கமேனி வலியுறுத்தியுள்ளார்.

ஈரானின் இலக்கு அண்டை நாடுகள் அல்ல என்றும், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்தான் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்கத் தளங்கள் அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும், இல்லையெனில் அவற்றின் மீதான தாக்குதல்கள் தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: 5 நாட்களுக்குப் பின் அலி கமேனிக்கு இந்தியா இரங்கல்! ஈரான் தூதரகத்தில் விக்ரம் மிஸ்ரி அஞ்சலி!
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் மினாப் (Minab) நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் முடிவில் இருந்து தாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என மொஜ்தபா கமேனி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து உரிய இழப்பீடு (Reparations) பெறப்படும் என்றும், அதற்கு அவர்கள் மறுத்தால் அமெரிக்கச் சொத்துக்கள் அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
56 வயதான மொஜ்தபா கமேனி, போரின் தொடக்கத்தில் காயமடைந்ததாகக் கூறப்படுவதால் இன்று கேமராவிற்கு முன்னால் தோன்றவில்லை. அவரது எழுத்துப்பூர்வ அறிக்கை மட்டுமே ஊடகங்களில் வாசிக்கப்பட்டது. இருப்பினும், ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அவரது உத்தரவை ஏற்று நீரிணையைத் தொடர்ந்து மூடி வைப்பதாக உறுதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை...! இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதிரடி தாக்குதல்!