சென்னை: சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதால் பெரும் அச்சம் ஏற்பட்டது.
தலைமைச் செயலகத்துக்கு அருகிலுள்ள துறைமுகப் பகுதி மற்றும் கடற்கரை சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் கலந்த புகைமூட்டம் காணப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
புகைமூட்டத்தின் மூலம் குறித்து விசாரணை நடத்தியதில், துறைமுகப் பகுதியில் ஏற்றுமதிக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சல்பர் ரசாயனப் பொருட்களில் இருந்து புகை வெளியானது என்பது தெரியவந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் ரசாயனத்தில் இருந்து வாயு வெளியேறி புகைமூட்டம் உருவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை எனவும், புகைமூட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும் சென்னை துறைமுக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

இந்த புகைமூட்டம் காரணமாக தலைமைச் செயலகம், துறைமுகம், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சிலர் முகக்கவசம் அணிந்தபடி நடமாடினர். தற்போது புகைமூட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை போன்ற பெருநகரங்களில் ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக துறைமுக அதிகாரிகள் முழு அளவில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த திடீர் புகைமூட்டம் சென்னை மக்களிடையே சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்திய போதிலும், உடனடி நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அதிக வெப்பநிலை மற்றும் ரசாயன சேமிப்பு தொடர்பான பாதுகாப்பு குறித்து மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
இதையும் படிங்க: மதுபான பாரில் தகராறு! சென்னையில் இளம்பெண் கார் ஏற்றிக்கொலை!! கதறி அழும் பெற்றோர்!