உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கு இப்போது மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது வெறும் ஒரு அதிகாரி நியமனப் பிரச்சினை அல்ல. காவல்துறையை அரசியல் தலையீட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற நீண்டகால போராட்டத்தின் ஒரு பகுதி. 2006-ல் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் மிக முக்கியமான வழிகாட்டுதல்களை அளித்தது. அப்போது நீதிமன்றம், மாநிலங்களில் டிஜிபி நியமனம் அரசியல் செல்வாக்கு அல்லது வேறு வெளிப்புற அழுத்தங்களால் பாதிக்கப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறியது.
அதற்காக, யூபிஎஸ்சி மூலம் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் இருந்து மூன்று பேர் கொண்ட பட்டியலைத் தயாரிக்க வேண்டும். அதில் இருந்து ஒருவரை மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும், அந்த நியமனம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், பொறுப்பு டிஜிபி என்ற கருத்தையே நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி அப்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றார். விதிமுறைப்படி, அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே யூபிஎஸ்சிக்கு பரிந்துரை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு ஆகஸ்ட் 29-ஆம் தேதிதான் பட்டியலை அனுப்பியது.

அதன் பிறகு செப்டம்பர் 29-ஆம் தேதி யூபிஎஸ்சி மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை அளித்தது. இருந்தும், தமிழக அரசு இதுவரை முழுநேர டிஜிபியை நியமிக்கவில்லை. அதற்கு பதிலாக ஜி. வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக தொடர்கிறார். இந்த நிலையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. டிஜிபி நியமனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக டிஜிபி பதவிக்கு பெயர்களை பரிந்துரைக்க குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக டிஜிபி தேர்வுக்கான குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!
மேலும் இரண்டு அதிகாரிகளில் ஒருவர் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மற்றொருவரை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பெயர்களை பரிந்துரைத்தும் தேர்வு செய்வதில் யுபிஎஸ்சி க்கு குழப்பம் உள்ளதாக தமிழக அரசு கூறியதால் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கு விதிகளில் தளர்வு ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்ந்தெடுக்க யுபிஎஸ்சி க்கு ஒரு வாரத்தில் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீட் PG கட் ஆப் குறைப்புக்கு எதிரான வழக்கு..! மத்திய அரசுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்..!