தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகின்றன. இதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், தமிழக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 97,37,832 (97.37 லட்சம்) பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதனால் தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாகச் சரிந்தது.

இந்த அதிரடி நீக்கங்களில் இடம்பெயர்ந்தவர்கள் சுமார் 66.44 லட்சம் பேரும், உயிரிழந்தவர்கள் சுமார் 26.94 லட்சம் பேரும், இரட்டைப் பதிவுகள் காரணமாக சுமார் 3.39 லட்சம் பேரும் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கத் தேர்தல் ஆணையம் போதிய கால அவகாசம் வழங்கியது.
இதையும் படிங்க: முதலமைச்சராக அல்ல; ஒரு சாதாரண குடிமகனாக! உச்சநீதிமன்றத்தில் வாதாடும் மம்தா பானர்ஜி!
இதன்படி, பெயர் சேர்க்கை மற்றும் திருத்தங்கள் கோரி மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 34.75 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்றுடன் நிறைவடையும் கள விசாரணைப் பணிகளில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் சென்று இந்த விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்துள்ளனர். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கைக்காக அதிக அளவில் ஆர்வம் காட்டியுள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான இறுதி முடிவுகள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் எடுக்கப்பட்டு, அதன் பிறகு பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதிப் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்படும்.
பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் இந்தப் பட்டியலே வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலாகக் கருதப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது 'Voter Helpline' செயலி மூலம் வரும் 17-ஆம் தேதிக்குப் பிறகு சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த இறுதிப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட உள்ளன.
இதையும் படிங்க: பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!